வருணாசிரம விளக்கம்

27 Dec 2011 8 comments

முன்குறிப்பு : இந்த கட்டுரையின் நோக்கம் உண்மையை உரைப்பதேயன்றி தனிப்பட்ட முறையில் எந்த பிரிவினரையும் புண்படுத்துவது அல்ல.

இந்திய பாரம்பரியத்தின் சனாதன தர்மம் உயர்ந்த கருத்துக்களை கொண்டது அதே சமயம் பல குழப்பங்களையும் கொண்டது. இப்படிப்பட்ட குழப்பமான விசயங்களைத்தான் நாத்திகர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் சாடுவதும் வசைபாடுவதும் ஏளனமும் செய்வதுண்டு. அதில் ஒன்றுதான் இந்த வருணாசிரமம் எனும் சாதிப்பாகுபாடு. அதாவது சனாதன தர்மத்தில் மனிதனுக்கு அவனவன் பிரிவுக்கு தக்கவாறு நடத்தை வரையறை செய்யப்பட்டிருக்கிறது. சனாதன தர்மம் என்பது இந்து மதத்தில் வலியுறுத்தப்படும் ஒட்டு மொத்த அறங்களின் தொகுப்பு. அதியற்புதமான கருத்துகளை கொண்ட சனாதன தர்மத்தில் ஏன் இதனைப் போன்ற மட்ட ரகமான கருத்துக்கள் இருக்கவேண்டும் மேலும் கிருஷ்ண பரமாத்வே கீதையில் வருணாசிரமப்படி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறார். ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது ஒருவிஷயம் புலப்பட்டது. அதாவது சனாதன தர்மத்தின் கருத்துகளை புரிந்துகொண்டவர்கள் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் மேலும் விளக்கத்தையும் தவறாக அளிக்கிறார்கள் என்பது தான். மேலும் ஒரு உண்மை என்னவெனில் வருணாசிரமம் என்பது பிறப்பால் வகுக்கப்படுவது அல்ல என்பதுதான் அடிப்படையான உண்மைக் கருத்து. வருணாசிரமம் மனிதனை நான்காகப்பிரிக்கிறது. அதாவது
  • பிராமணன் - துறவி
  • சத்திரியன்  - அரசாள்வோன் 
  • வைசியன்   - வணிகன்
  • சூத்திரன்      - சேவையாளன்
பிராமணன் என்பவன் யார். அந்த பதத்தின் பொருள் என்ன என்று பார்த்தால்  பிரமத்தை அறிந்தவன் பிராமணன். பிரமத்தை அடைய தனது வாழ்நாளில் முயற்சிசெய்பவன் பிராமணன். பிரமத்தை அடைந்தவன் பிராமணன். பிரமத்தை பற்றிய பிரக்ஞையே இல்லாதவன் எப்படி பிராமணன் ஆகமுடியும். தனது வாழ்நாளை உலக சுகங்களுக்கு மட்டுமே பயன்படுத்துபவன் எப்படி பிராமணன் ஆகமுடியும். அதாவது ஒரு மனிதன் இவ்வுலகவாழ்கையில் நன்கு பக்குவம் அடைந்தபின் இறைவனை பற்றியும் இறைஉலகை பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கிறான். பின் அதனை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கிறான். இங்கு அவனது பயணத்தை செவ்வனே நிறைவேற்ற முன்பே இறைவனை அறிந்த யோகிகளும் முனிவர்களும் அவனுக்கு உரிய வாழ்க்கை முறைகள், உணவுமுறைகள், ஒழுக்கங்கள், பயிற்சிமுறைகள்  ஆகியவற்றை வரையறை செய்துவைக்கிறார்கள் இவற்றை அவன் பின்பற்ற ஆரம்பிக்கும் கட்டத்தில் தான் அவனை பிராமணன் என்று அழைத்திருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியையும் காண்போம் அதாவது மந்திரங்களில் தலையாய மந்திரமாக கருதப்படுவது காயத்திரி மந்திரம் அந்த மந்திரத்தை பிறப்பால் பிராமணர் அல்லாதவர்களுக்கு உபதேசிப்பதில்லை என்ற கொள்கையும் நிலவுகிறது. ஆனால் காயத்திரி மந்திரத்தை அறிந்து வெளிப்படுத்தியவர் விசுவாமித்திர மகரிஷி. அவர் பிறப்பால் பிராமணனா என்று பார்த்தால் இல்லவே இல்லை அவர் ஒரு சத்திரியர். கௌசிகர் எனப்படும் பேரரசனாக இருந்தவர் வசிஷ்ட முனிவரிடம் உண்டாகிய பிரச்சனைக்குப்பின் கடுந்தவ வலிமையால் பிராமணனாக அறியப்பட்டவர். இதிலிருந்தே வருணாசிரமம் பிறப்பால் அமைக்கப்படவில்லை என்று நாம் அறியமுடிகிறது. பின்பு ஏன் அது பிறப்பை மையமாகக்கொண்ட வலிமையான கொள்கையாக உருமாறியது என்று சிந்தனை செய்தால் சத்திரியர்கள் எனப்படும் பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக பிறப்பை மையமாக கொண்ட இனமாக இருந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சந்ததியினரே அரசாளும் உரிமை கொண்டிருந்ததினால் இந்த நிலைமை நிலவியது. இந்த ஒரு பிரிவின் ஆதிக்கம் மற்ற மூன்று பிரிவினர்களிடமும் பிரதிபலித்திருக்கிறது. அதாவது விருப்பத்தின் பேரில் பிராமணனாக மாறியவர்கள் தன் குழந்தைகள் மேல் இருந்த பற்றின் காரணமாக அவர்களுக்கும் வலுக்கட்டாயமாக கொள்கைகளை திணித்திருக்கிறார்கள். குரு சிஷ்யனாக பின்பற்றப்பட்டு வந்த பிராமண ஒழுக்கம் தந்தை மகன் என்ற சங்கிலித்தொடருக்கு  மாறியது.  இதே விசயமே மற்ற பிற பிரிவுகளுக்கும்  பிரதிபலித்திருக்கிறது. காலவெள்ளத்தில் அது பிறப்பையே அடிப்படையாக கொண்ட பாகுபாடாக மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி நிலம் மொழி ஆகிய பிரிவுகளுடனும் இணைந்து இன்று ஏகப்பட்ட சாதிகளாக வடிவெடுத்திருக்கின்றது. தமிழில் பிராமணர்களை பார்பான் என்று அழைப்பார்கள் சரம்பார்ப்பான் என்பது அதன் முழுச்சொல் அதாவது ஒருவனின் நாடி நடையை ஆராய்ந்து பார்க்கும் வல்லமை கொண்டவன் என்றுபொருள். ஒரு இல்லறத்தான் தான் தொடங்க இருக்கும் விவசாயம் செய்வது கல்விகற்பது போன்ற செயலை எந்த காலத்தில் ஆரம்பிக்கவேண்டும் என்று அறிய துறவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களை நாடிசென்றார்கள். அவர்கள் நாடியின் நடையே செயல்களின் வீரியத்திற்கு காரணம் என்று அறிந்திருந்தனர். ஒருவனின் நாடிகள் செயல்படும் காலங்களையும் அறிந்திருந்தனர். எனவே அவர்களால் இல்லறத்தில் இருந்தவர்களுக்கு உதவ முடிந்தது. இதுபோன்று இல்லறவாசிகளும் துறவு மேற்கொள்வோரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்திருகின்றனர் இதைத்தான்  தேவர் திருவள்ளுவ நாயனார் துறவிகளின் கடமை இல்லறத்தானை பேணுவது மற்றும் இல்லறத்தானின் கடமை துறவிகளை பேணுவது என்று அழகாய் நவின்றிருகிறார். மேலும் முப்புரிநூல் எனப்படும் பூணூலும் முக்கியமான மூன்று நாடிகளை குறிக்கும் தத்துவமே தவிர வேறில்லை. ஆக இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில்
  • பிராமணன் என்பது இறைவனை தேடுபவர்களை குறிப்பது. இவர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாது இறைதேடுதலை நோக்கி பயணம் செய்வது மட்டுமே இவர்களின் தர்மம்.
  • சத்திரியன் என்பது நாட்டை அரசு செய்யும் பதவிகளில் இருக்கும் முதன்மை மற்றும் துணை பதவி வகிப்பவர்களை குறிப்பது. அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது இவர்களின் முக்கிய தர்மம் அதைவிட மக்களுக்கு நலம் செய்வதே இவர்களின் தலையாய தர்மமாக இருக்கவேண்டும்.
  • வைசியன் என்பது பணத்தை முதலாகப் போட்டு வணிகம் செய்வோரை குறிப்பது. இவர்களின் கடமை மக்களுக்கு தரமான பொருட்கள் அல்லது  சேவையை வழங்குவது சரியான விலை நிர்ணயம் செய்து தொழில் செய்வது இவர்கள் பின்பற்றவேண்டிய தர்மம்.
  • சூத்திரன் என்பது அனைத்து தொழிலாளர்களையும் குறிப்பது தனது தொழிலை செம்மையாக செய்வது தரமாக செய்வது இவர்கள் தர்மம். மேலும் இந்த நான்கு வருணத்தாருக்கும் பொதுவான கடமைகளாக குறிப்பிடப்பட்டுள்ள திருடாமை, கொல்லாமை போன்ற தர்மங்களையும்  முதன்மையாக கடைபிடிப்பது. இவைதான் சனாதன தர்மம் குறிப்பிடும் வருணாசிரமத்தின் ஒட்டுமொத்த சாராம்சம். 
இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனே சிலநேரங்களில் வைசியனாகவும்  சிலநேரங்களில் சூத்திரனாகவும் நடக்கவேண்டி இருக்கும் அவன் இருக்கும் நிலையை பொருத்து அதற்குரிய தர்மத்தை கடைபிடிக்கவேண்டியதுதான். ஆனால் பிராமணன் அதாவது இறைதேடும் துறவிகள் பிராமண தர்மத்தை தான் கடைபிடிக்கவேண்டும் இதுதான் கீதையின் சாராம்சம்.
மற்ற சாதிப்பாகுபாடுகள் எல்லாம் பிதற்றல்களே தவிர வேறு இல்லை. மேலும் மதம் மாறும் சிலர் சாதிகளை மட்டும் வைத்துகொண்டிருப்பதையும் காண்கிறோம். மதம் முதன்மை பிரிவு சாதி துணைபிரிவு மதமே மாறிவிட்டபின்பு சாதியை பிடித்துகொண்டிருப்பது அறியாமையே. சாதிகள் எல்லாம் பொய் தோற்றங்களே.   
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ்சோதி

தமிழும் மதமும் உண்மை

18 Nov 2011 1 comments


தமிழ் சுமார் 20,000ஆண்டுகளுக்கு முற்பட்டது. தற்போது நம்மிடம் இருக்கும் தமிழ் நூல்களின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் தேவமைந்தன் இயேசுநாதரின் மார்க்கமோ அல்லது  இறைதூதர் நபிகள் நாயகம் அவரது கொள்கைகளோ இந்தியாவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் வந்தது. எனவே தமிழில் கிறித்துவ இசுலாமிய நூல்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து தான் கிடைகின்றன. ஆதிகாலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட சமயம் சார்ந்தே பல தமிழ் நூல்கள் இருப்பதால் நாமும் நமது கலாசாரம் பண்பாட்டு கூறுகளை வெளியிடும் போது சமயம் சார்ந்தே சில விடயங்கள் அமைகின்றன. ஆனால் வீரமாமுனிவர் போன்ற புலவர்கள் பழங்காலத் தமிழுக்கு நிகரான கிறித்துவ நூல்களையும் மகாயோகியான குணங்குடி மஸ்தான் சாகிபு போன்றோர் தமிழ் செய்யுளாக திருப்பாடற்றிரட்டு  போன்ற இசுலாமிய நூல்களையும் இயற்றி இருந்தாலும் பிற மத நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன. மேலும் நமது இசுலாமிய சகோதரர்கள் யாரும் அல்லாவின் திருப்பெயரால் பாடல்களோ காவியங்களோ இயற்றவில்லை என்பதும் வருத்தமே.  அப்படியே நூல்கள் வெளியிட்டாலும் அவையும் அராபிய சொற்களை கொண்டே இருக்கிறது. இதனால் மற்ற சமயத்தோர்க்கு இசுலாமியத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாமை ஏற்படுகிறது. கிறித்துவ சகோதரர்களும் அப்படியே. உண்மையில் இசுலாமிய கொள்கைகள் தமிழ் சொற்களில் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. கிறித்துவ நூல்கள் பல தமிழில் இருப்பினும் தமிழ் இலக்கியத்தன்மையுடன் வெளிவரவில்லை. எனவே ஒருவன் தமிழ் சார்ந்து பேசினாலே மதம் சார்ந்து பேசுவது போன்ற மாயத்தோற்றமும் ஏற்படுகிறது. மிக சிறந்த பாடகரான நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பத்து வருடங்களுக்கு மேலாக எல்லா மதம் சார்ந்தவர்களையும் இசையால் கட்டி  வைத்திருக்கும் காரணம் அதில் இருக்கும் தமிழ் சொற்களே. புத்த சமண சமயங்கள் இங்கு கோலோச்சிய காலங்களில் அச்சமயத்தவர்  தமிழில் எண்ணற்ற நூல்கள் இயற்றி இருந்தனர். நம்முடைய ஐம்பெருங்காப்பியங்களும்  முக்கிய இலக்கண விளக்க நூலான யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களும் புத்த சமண சமயத்தோர் கொடைகளே. இதிலிருந்தே தமிழ் எப்போதும் பிற மதங்களை ஏற்றுகொள்ளும் தன்மையுடனே இருக்கிறது என்று அறியலாம்.புத்த சமண சமயங்கள் முழுக்க முழுக்க அக ஒழுக்கம் சார்ந்த சமயங்களாக இருந்ததால் அவர்களால் இலக்கியத்தமிழை பாங்குற இயற்ற முடிந்தது. ஆனால் கிறித்துவ இசுலாமிய சமயங்கள் புற ஒழுக்கம் சார்ந்து கொள்கைகள் அதிகமாக இருப்பதால் அவை சார்ந்து இலக்கிய தமிழில் நூல்களை இயற்றவில்லையா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தமிழை மதம் சார்ந்த மொழியாகவே உருவகித்து குறைகூறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர அவர்கள் தமிழில் தங்கள் நெறிகள் மார்கங்கள் கலை அறிவியல் ஆகிய நூல்களை இலக்கியம் சார்ந்து இயற்ற முன்வரவில்லை என்பதே உண்மை. சைவநெறி அகம்  புறம் என இரண்டு ஒழுக்கங்களையும் போதித்தது. எனவே மெய்கண்ட ஞானிகளால் இன்றுவரை தமிழ் இலக்கிய நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. உரைநடை நூல்கள் ஆயிரம் வந்தாலும் இலக்கிய நூல்களே காலத்தை கடந்து நிற்கும் என்பதே உண்மை. மேலும் தமிழ் என்பது பிறப்பு சார்ந்ததும் இனம் சார்ந்ததும் அல்ல. உதாரணமாக நமது தமிழ் தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு கேரள மாநிலம் சார்ந்த மலையாளத்தவர். தமிழ் இசைக்கான கர்நாடக சங்கீத கீர்த்தனங்களில் பெரும்பாலானவை தியாகராசர் பாடிய தெலுங்கு பாடல்களே. கான்ஸ்டான்டியூஸ் ஜோசப் பெஸ்கி அவர்களை அழகு தமிழில் வீரமாமுனிவர் என்று ஏற்றுகொண்டோம். இரண்டாம் போப் ஆண்டவரை தமிழராகவே உருவகிக்கிறோம். ஆக தமிழ் மொழியின் தொன்மையான வாழ்வியல் நெறிகள், பழக்கவழக்கங்கள், அறிவியல் கலைகள், பண்பாடு, ஆன்மீக கருத்துகள், வைத்தியம் ஆகியவற்றை  தற்காலத்தில் பயன்படுத்த விழையும் தமிழால் இணையும் யாவரும் தமிழர்களே. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆனால் அற்ப விடயங்களுக்காய் ஒரு மொழியை நிராகரித்தோம் எனில் அதில் இருக்கும் கருவூலங்கள் பயன்கள் அனைத்தையும் இழக்கிறோம் என்பதே உண்மை. எனவே தமிழை வாழ்வியலுக்கு பயன்படுத்தும் யாவரும் தமிழரே. தமிழை குறை சொல்லி அழிக்கும் புல்லுருவிகள் பிறப்பால் தமிழர் எனினும் அவர் அந்நியரே. நாம் அனைவரும் மதம் இனம் மொழி கடந்து தமிழால் இணைந்திருக்கிறோம் அதனை மேலும் வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். நமக்குள் பிரிவினை ஏன். இந்துவோ இசுலாமியனோ கிறித்துவனோ நாம் ஒன்றாய் பிறந்தோம் நாம் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டும் இளைய சமுதாயமாக வாழ்ந்து காட்டுவோம்.

பொருள் : தமிழ் மற்ற மதங்களை நிராகரிக்கவில்லை பிற மதங்கள் தான்  தமிழை நிராகரிகின்றன.

வேண்டுகோள் : ஏனைய மதம் சார்ந்த நண்பர்கள் தமிழை குறை சொல்வதை விட்டு தமிழ் இலக்கியம் சார்ந்து நூல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கவும். தமிழ் இலக்கிய நயத்துடன் பிற மத நூல்களை தமிழில் எதிர்பார்கிறோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஆரியம் திராவிடம் உண்மை

12 Nov 2011 8 comments


ஆரியம் திராவிடம் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது. மதத்தில் மெய்பொருளை மறைத்து மூட நம்பிக்கையை மையப்படுத்தி வாழும் இனத்தாலும் வடமொழியை நுழைத்து தமிழை சீர்குலைப்பவர்களாலும் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று ஆராய்வோமானால் ஆங்கில அரசு இந்தியாவிலிருந்து பல கருவூலங்களை களவாடிக்கொண்டு சென்றது. பூஜ்யம் செங்கோண முக்கோணம் சார்ந்த தேற்றம் போன்ற கணிதவியல் தத்துவங்கள், சதுரங்கம் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள். புஷபகவிமான (ஆகாய விமான வடிவமைப்பு)  சாஸ்திரம் இயந்திர சாஸ்திரம் போன்ற இயந்திரவியல் நூல்கள்  தனுர் சாஸ்திரம் போன்ற போர்கருவிகள் பயன்படுத்தும் உத்திகளை கொண்ட நூல்கள். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வானவியல் சாத்திரங்கள் மற்றும் கோகினூர் வைரம் பொன்னாலான சிலைகள் முத்து பவளம் போன்ற ஆபரணங்கள் உள்ளிட்ட  பலவற்றை பத்திரபடுத்தி எடுத்து சென்றது. (இன்று வரையுமே இந்த களவாடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது) பின்பு பின்பு மொகலாய மன்னர்களால் எஞ்சிய தடயங்கள் சூரையாடப்பட்டன. இந்த திருட்டுத்தனத்தை மறைக்க ஆங்கில அரசு மிகப்பெரும் வலையை பின்னியது. அதுதான் இந்தியர்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்குவது. அக்பர் சக்கரவர்த்தியால் அதர்வண வேதத்தின் கூறுகள் அதர்வண வேதத்தில் திறமைசாலியான அந்தணன் ஒருவனை சிறைபிடித்து மொகலாயர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.  மறைத்து வைக்கப்பட்ட அதர்வண வேதத்தின் கூறுகள் மொகலாயர்கள் வழியாக புதிய தோற்றமாக வெளிப்பட்டது. இதனை புதிய கலாசாரமாக சித்தரித்து ஆங்கில அரசு உருவாக்கியது. அதாவது மாக்ஸ்முல்லர் எனும் ஆராய்ச்சியாளனை  வைத்து ஆரியர்கள் ஆப்கனிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். இந்தியர்களுக்கு பாரம்பரியம் வெளியிலிருந்து வந்தது என்பது தான் அது. இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விடயம் உணவு உடை கலாசாரம் என்று எதிலுமே பக்குவமற்ற நிலையில் இந்தியாவுக்கு வெளியில் இருந்தவர்கள். எப்படி சாத்திரம் பண்பாடு எல்லாவற்றிலும் தேர்ந்த ஆரியர்களாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்க முடியும். ஆக ஆரியர்களும் இந்தியர்களே தமிழ் நாட்டிலேயே கோவை மக்களும் சென்னை மக்களும் ஒன்று போல் இருப்பதில்லை அப்படி இருக்கும் போது அகண்ட பாரதத்தில் வாழ்வியல் மற்றும் கலாச்சார மாற்றம் ஏற்படுவது இயல்புதானே.  ராமரை ஆரியராக சித்தரித்து சைவ வைணவ பிரிவினை வெறியாளர்களால் தனது கருத்தை வலுவூட்டிகொண்ட ஆங்கில அரசு மேலும் ஒரு சூனியம் வைத்தது மெக்காலே என்பவனை வைத்து கல்வித்திட்டம் உருவாக்கியது அதில் ஆரியன் பிரிவினைக் கொள்கையை நங்கூரமாகப் போட்டு இந்தியா முழுவதும் பரப்பியது. வாஸ்கோடகாமா கள்ளி கோட்டையை கண்டுபிடித்தார் என்றும் அவர் தென் ஆப்பிரிக்காவின் முனைக்கு நன்னம்ம்பிக்கை முனை என்று பெயரிட்டார் என்று எல்லாம் படித்த நாம் ரோமாபுரி வரை சென்று வந்திருந்த பாண்டியர்கள் பாதை வரைபடங்களை பயன்படுத்திய நம்மவர்கள்  தென்னாப்பிரிக்காவில் முத்துகளையும் வாசனை பொருட்களையும் விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்ட வாஸ்கோடகாமாவுக்கு இந்தியாவை கண்டு பிடிக்கும் நம்பிக்கை பிறந்ததையும் நம்மவர்களை தொடர்ந்து வந்தே இந்தியாவை கண்டுபிடித்தார் என்ற செய்தியையும் அறியாமல் ஒரு வரலாறு படித்தோம் இதுதான் மெக்காலே கல்வி முறையின் கேடு. இது போன்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டதால் தானே மேற்கத்திய நாகரிகமும் அந்த மொழியும் உயர்வாய் போனது. ஆக நாம் மாக்ஸ்முல்லர் கொள்கையையும் அழிக்கவில்லை மெக்காலே கல்வியையும் அழிக்கவில்லை நாமே சண்டையிட்டு கொண்டு நாமே குற்றம் கூறிக்கொண்டு திரிகிறோம். அவன் இன்றும் வருகிறான் நமது சாத்திரங்களை தோண்டி தான் கண்டுபிடித்ததாக பட்டயம்(pattern) வாங்கி விடுகிறான். நாம் அவனுக்கு வேலைகாரனாகிறோம். நாம் செய்ய வேண்டியது மூட நம்பிகையாக தோன்றும் சாத்திரங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அறிவியல் பூர்வமாக தோன்றும் சாத்திரங்களை ஆராயவேண்டும். இரண்டாவது வடமொழியை ஒரே அடியாக ஆரியமொழி என்று சொல்லி வெறுத்து விமர்சிப்பதை விட்டுவிட்டு நாம் பயன்படுத்தும் மொழியிலேயே ஏராளாமான வடமொழி சொற்கள் உள்ளன அவற்றை மாற்றும் வரை நாம் அவற்றை கருவேப்பிலை போல பயன்படுத்தியே ஆகவேண்டும். ஆக விமர்சிப்பவர்கள் விமர்சிப்பதை விட்டு அந்த சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை தமிழர்களுக்கு பரப்பினால் நன்றாக இருக்கும். மேலும்  வடமொழி கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. வடமொழிக்கு நிகரான தமிழ் சொற்கள் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். இங்கு அகராதியில் வார்த்தை இருக்கிறது ஆனால் பயன்படுத்துகிறோமா என்பதே சிந்திக்க வேண்டியது.  மேலும் நாமே  அழித்து கொண்டிருக்கிற தமிழ் நூல்களை தேடி எடுத்து பதிப்பிக்கும் வழியை பார்க்கவேண்டும் நாம் செய்ய வேண்டிய காரியங்களே நிறைய இருக்கின்றன வெறுமனே திராவிடம் தமிழினம் என்று கத்தி கொண்டு இருந்தால் போதாது நாம் செயல் வீரர்களாக வேண்டும் தமிழினத்தை மேம்படுத்த பல செயல்கள் வரிசையில் இருக்கின்றன. இரண்டாவது இந்துமதம் ஆரியம் எனவும் சைவம் திராவிடம் என்பது சிலர் கூற்று. இந்தியாவின் மதம் சைவ சமயமே ராமரும் சிவ வழிபாடு செய்திருக்கிறார். சிவன் என்பது பராபரம் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பின் ஆவியானவர் என்றும் அல்லா என்றும்  பெயரிடப்பட்ட உண்மை கடவுள். லிங்கம் என்பது தாரணை செய்வதற்கான ஒரு ஊடகம் பின்பு அது உருவழிபாடு ஆகிப்போனது வேறு. மாக்ஸ்முல்லர் தந்து ஆரிய கூற்றுக்கு முன் வைக்கும் சிந்து சமவெளி தடயங்களும் சிவ வழிபாட்டை உறுதி செய்கின்றன. ஆக ஆரியமும் சைவமே. ரிக் வேதத்தின் இறை தேடலுக்கான மந்திரங்களும் சிவ  வழிபாட்டை குறிப்பதாகவே உள்ளன. உலகியலுக்கான வழிபாட்டு மந்திரங்களில் தேவர்கள் சிலரை பராபரத்தின் அளவுக்கு ஏற்றி சொன்னதால் குழப்பம் நேரிட்டது. ஆனால் ஆரியர்கள் இந்தியர்களே. சித்தர்கள் முக்திக்கு சாதனமாக மந்திர, தந்திர, யந்திர, பயன்படுத்தும் முறையை கடைபிடிப்பவர்களை ஆரியர்கள் என்றனரே தவிர ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்லர். இந்துமதம் என்பது உலக நாடுகள் வைத்த பெயர். ஏனெனில் நாம் மதத்திற்கு இந்துமதம் பெயரிடவேயில்லை. ஒரே ஒரு மார்க்கமாய் இருந்ததால் யாரும் பெயர் வைக்கவில்லை வேறு நாடுகளில் இறைதூதர்கள் தோன்றி புதிய மார்க்கம் உருவானபோது இந்தியாவில் பின்பற்றப்பட்ட மார்க்கத்துக்கு அவர்களுக்கு பெயர் தேவைப்பட்டது எனவே இந்து மதம் என்று பெயரிட்டனர். ஆக சைவநெறியே இந்து மதம் என்று பிற நாட்டவர்களால் அழைக்கப்பட்டது. வைணவம் என்றால் கிருஷ்ணர் உபதேசித்த கட்டளைகளை பின்பற்றுவோர் என்றும் சாக்தம் என்றால் ஆதிசங்கரர் கட்டளைகளை பின்பற்றுவோர் என்றும் அறியப்படுகிறதே தவிர இவை ஆரியர்களின்  தனி மார்க்கம் அல்ல. வேதம் என்பது வெளியிலிருந்து வந்தவர்களால் இயற்றப்பட்ட ஆரிய நூல் என்பதும் தவறு அது அட்டாங்க யோகத்தின் இயம நியமத்தை விரித்துரைக்கும் ஒரு பகுதியே. இன்னும் சரியாக சொன்னால் இறைதேடுவதற்கான சுத்தமான சைவநெறியை உரைத்த தமிழ் நூல்கள் திராவிடமாகவும்  உலகியல் வாழ்க்கைக்கான நெளிவு சுளிவுகளை கதையாகவும் புராணமாகவும் தத்துவமாகவும் விரித்து உரைத்த வடமொழி நூல்கள் ஆரியமாகவும் கருதப்படுகிறது.
ஆக ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று கூறுபவர்கள் இனிமேல் ஆரியம் திராவிடம் என்ற பிரிவினையை தூண்டும் சொல்லை பயன்படுத்தாமல் நேரடியாக மதத்தின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கையை சாடுங்கள் வடமொழி பயன்பாட்டை சாடாமல் அதற்கு உரிய தமிழ் சொல்லை பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்.

கட்டுரையின் பொருள் : ஆரியர்களும் திராவிடர்களும் இந்தியர்களே.
இதனை மறுப்பவர்களுக்கு கட்டுரையின் பொருள் : ஆரியர்களும் திராவிடர்களும் வேறு
  வேறு என்று நினைத்தால் மேலும் இந்த பிரிவினை வாதத்தை வலுப்படுத்தாமல் விமர்சனம் செய்வதைவிட்டு விட்டு கண்ணியமாக திராவிடம் (தமிழர்) மேம்பாட்டுக்கு செயல்படவும்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil