தமிழும் மதமும் உண்மை

18 Nov 2011


தமிழ் சுமார் 20,000ஆண்டுகளுக்கு முற்பட்டது. தற்போது நம்மிடம் இருக்கும் தமிழ் நூல்களின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் தேவமைந்தன் இயேசுநாதரின் மார்க்கமோ அல்லது  இறைதூதர் நபிகள் நாயகம் அவரது கொள்கைகளோ இந்தியாவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் வந்தது. எனவே தமிழில் கிறித்துவ இசுலாமிய நூல்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து தான் கிடைகின்றன. ஆதிகாலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட சமயம் சார்ந்தே பல தமிழ் நூல்கள் இருப்பதால் நாமும் நமது கலாசாரம் பண்பாட்டு கூறுகளை வெளியிடும் போது சமயம் சார்ந்தே சில விடயங்கள் அமைகின்றன. ஆனால் வீரமாமுனிவர் போன்ற புலவர்கள் பழங்காலத் தமிழுக்கு நிகரான கிறித்துவ நூல்களையும் மகாயோகியான குணங்குடி மஸ்தான் சாகிபு போன்றோர் தமிழ் செய்யுளாக திருப்பாடற்றிரட்டு  போன்ற இசுலாமிய நூல்களையும் இயற்றி இருந்தாலும் பிற மத நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன. மேலும் நமது இசுலாமிய சகோதரர்கள் யாரும் அல்லாவின் திருப்பெயரால் பாடல்களோ காவியங்களோ இயற்றவில்லை என்பதும் வருத்தமே.  அப்படியே நூல்கள் வெளியிட்டாலும் அவையும் அராபிய சொற்களை கொண்டே இருக்கிறது. இதனால் மற்ற சமயத்தோர்க்கு இசுலாமியத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாமை ஏற்படுகிறது. கிறித்துவ சகோதரர்களும் அப்படியே. உண்மையில் இசுலாமிய கொள்கைகள் தமிழ் சொற்களில் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. கிறித்துவ நூல்கள் பல தமிழில் இருப்பினும் தமிழ் இலக்கியத்தன்மையுடன் வெளிவரவில்லை. எனவே ஒருவன் தமிழ் சார்ந்து பேசினாலே மதம் சார்ந்து பேசுவது போன்ற மாயத்தோற்றமும் ஏற்படுகிறது. மிக சிறந்த பாடகரான நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பத்து வருடங்களுக்கு மேலாக எல்லா மதம் சார்ந்தவர்களையும் இசையால் கட்டி  வைத்திருக்கும் காரணம் அதில் இருக்கும் தமிழ் சொற்களே. புத்த சமண சமயங்கள் இங்கு கோலோச்சிய காலங்களில் அச்சமயத்தவர்  தமிழில் எண்ணற்ற நூல்கள் இயற்றி இருந்தனர். நம்முடைய ஐம்பெருங்காப்பியங்களும்  முக்கிய இலக்கண விளக்க நூலான யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களும் புத்த சமண சமயத்தோர் கொடைகளே. இதிலிருந்தே தமிழ் எப்போதும் பிற மதங்களை ஏற்றுகொள்ளும் தன்மையுடனே இருக்கிறது என்று அறியலாம்.புத்த சமண சமயங்கள் முழுக்க முழுக்க அக ஒழுக்கம் சார்ந்த சமயங்களாக இருந்ததால் அவர்களால் இலக்கியத்தமிழை பாங்குற இயற்ற முடிந்தது. ஆனால் கிறித்துவ இசுலாமிய சமயங்கள் புற ஒழுக்கம் சார்ந்து கொள்கைகள் அதிகமாக இருப்பதால் அவை சார்ந்து இலக்கிய தமிழில் நூல்களை இயற்றவில்லையா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தமிழை மதம் சார்ந்த மொழியாகவே உருவகித்து குறைகூறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர அவர்கள் தமிழில் தங்கள் நெறிகள் மார்கங்கள் கலை அறிவியல் ஆகிய நூல்களை இலக்கியம் சார்ந்து இயற்ற முன்வரவில்லை என்பதே உண்மை. சைவநெறி அகம்  புறம் என இரண்டு ஒழுக்கங்களையும் போதித்தது. எனவே மெய்கண்ட ஞானிகளால் இன்றுவரை தமிழ் இலக்கிய நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. உரைநடை நூல்கள் ஆயிரம் வந்தாலும் இலக்கிய நூல்களே காலத்தை கடந்து நிற்கும் என்பதே உண்மை. மேலும் தமிழ் என்பது பிறப்பு சார்ந்ததும் இனம் சார்ந்ததும் அல்ல. உதாரணமாக நமது தமிழ் தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு கேரள மாநிலம் சார்ந்த மலையாளத்தவர். தமிழ் இசைக்கான கர்நாடக சங்கீத கீர்த்தனங்களில் பெரும்பாலானவை தியாகராசர் பாடிய தெலுங்கு பாடல்களே. கான்ஸ்டான்டியூஸ் ஜோசப் பெஸ்கி அவர்களை அழகு தமிழில் வீரமாமுனிவர் என்று ஏற்றுகொண்டோம். இரண்டாம் போப் ஆண்டவரை தமிழராகவே உருவகிக்கிறோம். ஆக தமிழ் மொழியின் தொன்மையான வாழ்வியல் நெறிகள், பழக்கவழக்கங்கள், அறிவியல் கலைகள், பண்பாடு, ஆன்மீக கருத்துகள், வைத்தியம் ஆகியவற்றை  தற்காலத்தில் பயன்படுத்த விழையும் தமிழால் இணையும் யாவரும் தமிழர்களே. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆனால் அற்ப விடயங்களுக்காய் ஒரு மொழியை நிராகரித்தோம் எனில் அதில் இருக்கும் கருவூலங்கள் பயன்கள் அனைத்தையும் இழக்கிறோம் என்பதே உண்மை. எனவே தமிழை வாழ்வியலுக்கு பயன்படுத்தும் யாவரும் தமிழரே. தமிழை குறை சொல்லி அழிக்கும் புல்லுருவிகள் பிறப்பால் தமிழர் எனினும் அவர் அந்நியரே. நாம் அனைவரும் மதம் இனம் மொழி கடந்து தமிழால் இணைந்திருக்கிறோம் அதனை மேலும் வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். நமக்குள் பிரிவினை ஏன். இந்துவோ இசுலாமியனோ கிறித்துவனோ நாம் ஒன்றாய் பிறந்தோம் நாம் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டும் இளைய சமுதாயமாக வாழ்ந்து காட்டுவோம்.

பொருள் : தமிழ் மற்ற மதங்களை நிராகரிக்கவில்லை பிற மதங்கள் தான்  தமிழை நிராகரிகின்றன.

வேண்டுகோள் : ஏனைய மதம் சார்ந்த நண்பர்கள் தமிழை குறை சொல்வதை விட்டு தமிழ் இலக்கியம் சார்ந்து நூல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கவும். தமிழ் இலக்கிய நயத்துடன் பிற மத நூல்களை தமிழில் எதிர்பார்கிறோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


1 comments:

  1. SARAVANAN.K said...:

    Nice site. Thanks to introduce.
    And if you want to read news about tamil and tamilnadu,

    please visit,

    http://www.sangapalahai.blogspot.com

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil