பொருட்பதம் : சான்றோர்

26 Feb 2012 0 comments

சொல்லை பிரித்தால் சான்று என்றும் ஓர் என்றும் பிரியும். இதுதான் வாழ்வியல் நெறி என மக்களுக்கு ஓர் சான்றாக வாழ்வோரைத் தான் சான்றோர் என்கிறது தமிழ்.  மதி நிறைந்தவர்கள். பொய் வேடமில்லாத ஆன்மிகத்தை தனக்குள் கொண்டவர்கள். மக்களுக்கு தனது வாழ்க்கையையே எடுத்துகாட்டாக வாழ்ந்து காட்டுவோர்கள். உலகியலின் நன்மை தீமை என்ற அத்தனை விதிகளையும் அறிந்தவர்கள். தன்னால் எந்த உயிருக்கும் துன்பம் நேராதவாறு எச்சரிக்கையாய் வாழ்பவர்கள். கவலை பயம் நோய் சஞ்சலம் சினம் போன்ற அத்தனை எதிர்மறை எண்ணங்களும் தோன்றாத வகையில் அந்த உணர்வுகளை வென்று புன்முறுவலுடன் காட்சி அளிப்போர்கள். மேலும் முக்கியமான ஒரு அர்த்தமும் உண்டு அதாவது பெண்ணுக்கு கற்பு என்ற வார்த்தை எவ்வாறோ அதே போன்றே ஆணுக்கு சான்றாண்மை என்ற வார்த்தையும் பொருந்தும் அதாவது கற்புடைய ஆண் எனலாம். திருமணம் ஆன ஆண் ஒரே மனைவியுடனும் திருமணமாகாத ஆண் பிரமச்சரிய ஒழுக்கத்திலும் மனதால் தவறாது நிற்பதையும் உள்ளே அடக்கியது சான்றாண்மை என்ற இச்சொல். இவ்வளவு அர்த்தங்களையும் கொண்டது தான் இந்த வார்த்தை இந்த வார்த்தைக்கு நிகராக இதே அர்த்தங்களை குறிக்கும் பொருளுடன் ஒரு வார்த்தை எந்த மொழியிலும் இல்லை எனலாம். இது தான் தமிழின் சிறப்பு.


   மேலும் எண்ணிலா சான்றோர்களையும் கண்டதும் நமது தமிழ் மண்தான். அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை ஆராய்ந்தால் சான்றோர் என யாரையாவது தேடித்தான் சொல்லவேண்டியிருக்கும். இது தான் நம் தமிழ் மண்ணின் சிறப்பு. சான்றோர்கள் இப்படி தான் இருப்பார்கள் என சான்றோருக்கு உரிய குணங்களை நமது தமிழ் நூல்கள் பலவும் நமக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு போய் இருக்கின்றன. நாமும் அவைகளை பின்பற்றி மேல் நிலை நோக்கி நகர்ந்து நமக்கும் பிறருக்கும் நன்மையையும் இன்பத்தையும் அளிக்கும் வாழ்கையை வாழ முயற்சி  செய்யலாம். நாம் சான்றோர் தானா என்று நம்மை நாமே கேட்டுகொண்டால் இல்லையென்ற பதில் பளிச் என்று வரும். நாம் ஒருவேளை சான்றோர் ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம் ஆனால் அந்த நிலையை நோக்கி நமது பயணத்தை தொடர்வதில் தவறில்லையே. நம் இலட்சியத்தை மரத்தின் உச்சியாக வைத்தால் நமது பயணம் புழுவை போன்று மெதுவாக இருக்கும். ஆனால் நம் இலட்சியத்தை வானமாக வைத்தால் நமது பயணம் கழுகை போன்று விரைவாக இருக்கும். வானத்தை அடையாவிடிலும் மலை உச்சியை எட்டும் சாத்தியம் உண்டு.

பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்க
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி   


 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil