முன்குறிப்பு : இந்த கட்டுரையின் நோக்கம் உண்மையை உரைப்பதேயன்றி தனிப்பட்ட முறையில் எந்த பிரிவினரையும் புண்படுத்துவது அல்ல.
இந்திய பாரம்பரியத்தின் சனாதன தர்மம் உயர்ந்த கருத்துக்களை கொண்டது அதே
சமயம் பல குழப்பங்களையும் கொண்டது. இப்படிப்பட்ட குழப்பமான விசயங்களைத்தான்
நாத்திகர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் சாடுவதும் வசைபாடுவதும் ஏளனமும்
செய்வதுண்டு. அதில் ஒன்றுதான் இந்த வருணாசிரமம் எனும் சாதிப்பாகுபாடு.
அதாவது சனாதன தர்மத்தில் மனிதனுக்கு அவனவன் பிரிவுக்கு தக்கவாறு நடத்தை
வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
சனாதன தர்மம் என்பது இந்து மதத்தில்
வலியுறுத்தப்படும் ஒட்டு மொத்த அறங்களின் தொகுப்பு. அதியற்புதமான
கருத்துகளை கொண்ட சனாதன தர்மத்தில் ஏன் இதனைப் போன்ற மட்ட ரகமான
கருத்துக்கள் இருக்கவேண்டும் மேலும் கிருஷ்ண பரமாத்வே கீதையில் வருணாசிரமப்படி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறார். ஏன் இப்படி என்று
ஆராய்ந்தபோது ஒருவிஷயம் புலப்பட்டது. அதாவது
சனாதன தர்மத்தின் கருத்துகளை
புரிந்துகொண்டவர்கள் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் மேலும் விளக்கத்தையும் தவறாக அளிக்கிறார்கள் என்பது தான். மேலும் ஒரு உண்மை என்னவெனில் வருணாசிரமம்
என்பது பிறப்பால் வகுக்கப்படுவது அல்ல என்பதுதான் அடிப்படையான உண்மைக் கருத்து. வருணாசிரமம் மனிதனை
நான்காகப்பிரிக்கிறது. அதாவது
- பிராமணன் - துறவி
-
சத்திரியன் - அரசாள்வோன்
-
வைசியன் - வணிகன்
-
சூத்திரன் - சேவையாளன்
பிராமணன் என்பவன் யார். அந்த பதத்தின் பொருள் என்ன என்று பார்த்தால்
பிரமத்தை அறிந்தவன் பிராமணன்.
பிரமத்தை அடைய தனது வாழ்நாளில்
முயற்சிசெய்பவன் பிராமணன். பிரமத்தை அடைந்தவன் பிராமணன். பிரமத்தை பற்றிய
பிரக்ஞையே இல்லாதவன் எப்படி பிராமணன் ஆகமுடியும். தனது வாழ்நாளை உலக
சுகங்களுக்கு மட்டுமே பயன்படுத்துபவன் எப்படி பிராமணன் ஆகமுடியும். அதாவது
ஒரு மனிதன் இவ்வுலகவாழ்கையில் நன்கு பக்குவம் அடைந்தபின் இறைவனை பற்றியும்
இறைஉலகை பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கிறான். பின் அதனை நோக்கிய பயணத்தை
ஆரம்பிக்கிறான். இங்கு அவனது பயணத்தை செவ்வனே நிறைவேற்ற முன்பே இறைவனை
அறிந்த யோகிகளும் முனிவர்களும் அவனுக்கு உரிய வாழ்க்கை முறைகள்,
உணவுமுறைகள், ஒழுக்கங்கள், பயிற்சிமுறைகள் ஆகியவற்றை வரையறை
செய்துவைக்கிறார்கள் இவற்றை அவன் பின்பற்ற ஆரம்பிக்கும் கட்டத்தில் தான்
அவனை பிராமணன் என்று அழைத்திருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் ஒரு
செய்தியையும் காண்போம் அதாவது மந்திரங்களில் தலையாய மந்திரமாக கருதப்படுவது
காயத்திரி மந்திரம் அந்த மந்திரத்தை பிறப்பால் பிராமணர் அல்லாதவர்களுக்கு
உபதேசிப்பதில்லை என்ற கொள்கையும் நிலவுகிறது. ஆனால் காயத்திரி மந்திரத்தை
அறிந்து வெளிப்படுத்தியவர் விசுவாமித்திர மகரிஷி. அவர் பிறப்பால் பிராமணனா
என்று பார்த்தால் இல்லவே இல்லை அவர் ஒரு சத்திரியர். கௌசிகர் எனப்படும்
பேரரசனாக இருந்தவர் வசிஷ்ட முனிவரிடம் உண்டாகிய பிரச்சனைக்குப்பின் கடுந்தவ
வலிமையால் பிராமணனாக அறியப்பட்டவர். இதிலிருந்தே வருணாசிரமம் பிறப்பால்
அமைக்கப்படவில்லை என்று நாம் அறியமுடிகிறது. பின்பு ஏன் அது பிறப்பை
மையமாகக்கொண்ட வலிமையான கொள்கையாக உருமாறியது என்று சிந்தனை செய்தால்
சத்திரியர்கள் எனப்படும் பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக
பிறப்பை மையமாக கொண்ட இனமாக இருந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்கள்
சந்ததியினரே அரசாளும் உரிமை கொண்டிருந்ததினால் இந்த நிலைமை நிலவியது. இந்த
ஒரு பிரிவின் ஆதிக்கம் மற்ற மூன்று பிரிவினர்களிடமும்
பிரதிபலித்திருக்கிறது. அதாவது விருப்பத்தின் பேரில் பிராமணனாக மாறியவர்கள்
தன் குழந்தைகள் மேல் இருந்த பற்றின் காரணமாக அவர்களுக்கும் வலுக்கட்டாயமாக
கொள்கைகளை திணித்திருக்கிறார்கள். குரு சிஷ்யனாக பின்பற்றப்பட்டு வந்த
பிராமண ஒழுக்கம் தந்தை மகன் என்ற சங்கிலித்தொடருக்கு மாறியது. இதே விசயமே
மற்ற பிற பிரிவுகளுக்கும் பிரதிபலித்திருக்கிறது.
காலவெள்ளத்தில் அது
பிறப்பையே அடிப்படையாக கொண்ட பாகுபாடாக மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி நிலம்
மொழி ஆகிய பிரிவுகளுடனும் இணைந்து இன்று ஏகப்பட்ட சாதிகளாக வடிவெடுத்திருக்கின்றது. தமிழில் பிராமணர்களை பார்பான் என்று அழைப்பார்கள்
சரம்பார்ப்பான் என்பது அதன் முழுச்சொல் அதாவது ஒருவனின் நாடி நடையை ஆராய்ந்து
பார்க்கும் வல்லமை கொண்டவன் என்றுபொருள். ஒரு இல்லறத்தான் தான் தொடங்க
இருக்கும் விவசாயம் செய்வது கல்விகற்பது போன்ற செயலை எந்த காலத்தில்
ஆரம்பிக்கவேண்டும் என்று அறிய துறவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களை நாடிசென்றார்கள். அவர்கள் நாடியின் நடையே செயல்களின்
வீரியத்திற்கு காரணம் என்று அறிந்திருந்தனர். ஒருவனின் நாடிகள் செயல்படும்
காலங்களையும் அறிந்திருந்தனர். எனவே அவர்களால் இல்லறத்தில் இருந்தவர்களுக்கு உதவ முடிந்தது. இதுபோன்று இல்லறவாசிகளும் துறவு மேற்கொள்வோரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்திருகின்றனர் இதைத்தான்
தேவர் திருவள்ளுவ நாயனார் துறவிகளின் கடமை இல்லறத்தானை
பேணுவது மற்றும் இல்லறத்தானின் கடமை துறவிகளை பேணுவது என்று அழகாய் நவின்றிருகிறார். மேலும் முப்புரிநூல் எனப்படும் பூணூலும்
முக்கியமான மூன்று நாடிகளை குறிக்கும் தத்துவமே தவிர வேறில்லை. ஆக
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில்
-
பிராமணன் என்பது இறைவனை தேடுபவர்களை குறிப்பது. இவர்கள் எவ்வுயிருக்கும்
தீங்கு செய்யாது இறைதேடுதலை நோக்கி பயணம் செய்வது மட்டுமே இவர்களின் தர்மம்.
-
சத்திரியன் என்பது நாட்டை அரசு செய்யும் பதவிகளில் இருக்கும் முதன்மை
மற்றும் துணை பதவி வகிப்பவர்களை குறிப்பது. அரசாங்கத்தின்
விதிமுறைகளை பின்பற்றுவது இவர்களின் முக்கிய தர்மம் அதைவிட மக்களுக்கு நலம் செய்வதே
இவர்களின் தலையாய தர்மமாக இருக்கவேண்டும்.
- வைசியன் என்பது பணத்தை முதலாகப் போட்டு வணிகம் செய்வோரை குறிப்பது. இவர்களின் கடமை
மக்களுக்கு தரமான பொருட்கள் அல்லது சேவையை வழங்குவது சரியான விலை
நிர்ணயம் செய்து தொழில் செய்வது இவர்கள் பின்பற்றவேண்டிய தர்மம்.
-
சூத்திரன் என்பது அனைத்து தொழிலாளர்களையும் குறிப்பது தனது தொழிலை
செம்மையாக செய்வது தரமாக செய்வது இவர்கள் தர்மம். மேலும் இந்த நான்கு
வருணத்தாருக்கும் பொதுவான கடமைகளாக குறிப்பிடப்பட்டுள்ள திருடாமை, கொல்லாமை
போன்ற தர்மங்களையும் முதன்மையாக கடைபிடிப்பது. இவைதான் சனாதன தர்மம்
குறிப்பிடும் வருணாசிரமத்தின் ஒட்டுமொத்த சாராம்சம்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனே சிலநேரங்களில் வைசியனாகவும் சிலநேரங்களில் சூத்திரனாகவும் நடக்கவேண்டி இருக்கும் அவன்
இருக்கும் நிலையை பொருத்து அதற்குரிய தர்மத்தை கடைபிடிக்கவேண்டியதுதான்.
ஆனால் பிராமணன் அதாவது இறைதேடும் துறவிகள் பிராமண தர்மத்தை தான்
கடைபிடிக்கவேண்டும் இதுதான் கீதையின் சாராம்சம்.
மற்ற சாதிப்பாகுபாடுகள்
எல்லாம் பிதற்றல்களே தவிர வேறு இல்லை. மேலும் மதம் மாறும் சிலர் சாதிகளை
மட்டும் வைத்துகொண்டிருப்பதையும் காண்கிறோம். மதம் முதன்மை பிரிவு சாதி
துணைபிரிவு மதமே மாறிவிட்டபின்பு சாதியை பிடித்துகொண்டிருப்பது அறியாமையே.
சாதிகள் எல்லாம் பொய் தோற்றங்களே.
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ்சோதி
உண்மையான கருத்துகள். இதை வைத்து விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு. அதனால் இந்த கருத்தினை மெல்ல அனைவருக்கும் புரியும்படி விளக்கவேண்டும்.