மதி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு ஒன்று நிலா மற்றொன்று மூளையின் திறன். மூளையின் திறனுக்கு ஏன் நிலவை குறிக்கும் சொல்லை தமிழில் பதிலிட்டிருக்கிறார்கள்
என்று ஆய்வோம்.
நிலவின் தன்மை எவை
- தேய்வதும் வளர்வதும் (உண்மையில் தேய்வதோ மறைவதோ இல்லை)
- வெளிச்சமாயும் மங்கலாயும் தெரிவதும்
- மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதும் அவை விலகினால் பிரகாசிப்பதும்
இவை தான் நிலவின் இயல்புகள். இதே போன்று தான்
நமது பிராணசக்தியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப நமது மதியின் செயல்பாடு அதிகரிப்பதையும் தேய்வதையும் காணலாம்.
அதிக வேலை, பசி, சோர்வு, கவலை ஆகிய நேரங்களில் நம் மதியின் செயல் திறன்
மங்கியும் அதே போன்று அதிகாலை விழிப்பு, உற்சாகம், ஒழுக்கம் இவை
ஓங்கியிருக்கும் காலங்களில் நமது மதியின் செயல்பாடு பிரகாசமாயும்
இருப்பதையும் காணலாம்.
மேலும் கோபம், காமம், வெகுளி, அழுக்காறு, பயம் ஆகிய
உணர்வுகள் எனும் மேகங்கள் முற்றிலுமாய் நம் மதியின் செயல்பாட்டை
மறைத்துவிடுவதையும் இந்த உணர்வுகள் நீங்கிய காலம் மீண்டும் மதியின்
செயல்பாடு பிரகாசிப்பதையும் காணலாம். மதி என்ற நிலவை குறிக்கும் சொல்லையே
நம் ஞானத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டதன் காரணம் இதுவே.
இங்கு மதி என்ற
சொல்லில் உள்ள ஆழமும் பொருண்மையும் இதற்கு நிகரான Knowledge, Wise போன்ற சொற்களில் இல்லை. உதாரணமாக Knowledge எனும் சொல் வெறும் தெரிந்து கொள்ளுதல் என்ற பொருளை மட்டுமே குறிக்கும்.
அதாவது அதிகப்படியான நூல்களை படிப்பது விஷயங்களை குப்பைபோல் ஏற்றிகொள்வது
என்றுதான் பொருள். அதேசமயம் Knowledge என்ற சொல் மூளையின் திறனை நல்ல செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்துவதை
குறிக்கும் என்று சொல்லமுடியாது. கெட்ட செயலுக்கு மூளையின் திறனை
பயன்படுத்தினாலும் Knowledge என்ற சொல்லை பிரதியிடலாம். ஆனால் மதி என்ற சொல் மேலே
விவரிக்கப்பட்ட அத்தனை பொருண்மைகளையும் உள்ளடக்கியது மேலும் மதி என்பது
நுட்பமான செயல்பாட்டையும் நல்ல செயல்களுக்காக மட்டுமே மூளையின் திறனை
வெளிப்படுத்துவதையும் குறிக்கும். ஏனெனில் கெட்ட செயல்களுக்கு மூளையின்
திறனை பயன்படுத்தினால் அதற்கு வேறு சொற்கள் உண்டு அவை கபடம், சூது போன்றவை. இதை
போன்ற நுண்ணிய பகுப்புகள் தமிழில் தான் உண்டு.