பொருட்பதம் : மதி

31 Jan 2012 0 comments

மதி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு ஒன்று நிலா மற்றொன்று மூளையின் திறன். மூளையின் திறனுக்கு ஏன் நிலவை குறிக்கும் சொல்லை தமிழில் பதிலிட்டிருக்கிறார்கள் என்று ஆய்வோம். 

நிலவின் தன்மை எவை
  • தேய்வதும் வளர்வதும் (உண்மையில் தேய்வதோ மறைவதோ இல்லை)
  • வெளிச்சமாயும் மங்கலாயும் தெரிவதும்
  • மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதும் அவை விலகினால் பிரகாசிப்பதும்
இவை தான் நிலவின் இயல்புகள். இதே போன்று தான் நமது பிராணசக்தியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப நமது  மதியின் செயல்பாடு அதிகரிப்பதையும் தேய்வதையும்  காணலாம். 

       அதிக வேலை, பசி, சோர்வு, கவலை ஆகிய நேரங்களில் நம் மதியின் செயல் திறன் மங்கியும் அதே போன்று அதிகாலை விழிப்பு, உற்சாகம், ஒழுக்கம் இவை ஓங்கியிருக்கும் காலங்களில் நமது  மதியின் செயல்பாடு பிரகாசமாயும் இருப்பதையும் காணலாம். 

      மேலும் கோபம், காமம், வெகுளி, அழுக்காறு, பயம் ஆகிய உணர்வுகள் எனும் மேகங்கள் முற்றிலுமாய் நம் மதியின் செயல்பாட்டை மறைத்துவிடுவதையும் இந்த உணர்வுகள் நீங்கிய காலம் மீண்டும் மதியின் செயல்பாடு பிரகாசிப்பதையும் காணலாம். மதி என்ற நிலவை குறிக்கும் சொல்லையே நம் ஞானத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டதன் காரணம் இதுவே. 

      இங்கு மதி என்ற சொல்லில் உள்ள ஆழமும் பொருண்மையும் இதற்கு நிகரான Knowledge, Wise போன்ற சொற்களில்  இல்லை. உதாரணமாக Knowledge எனும் சொல் வெறும் தெரிந்து கொள்ளுதல் என்ற பொருளை மட்டுமே குறிக்கும். அதாவது அதிகப்படியான நூல்களை படிப்பது விஷயங்களை குப்பைபோல் ஏற்றிகொள்வது என்றுதான் பொருள். அதேசமயம் Knowledge என்ற சொல் மூளையின் திறனை நல்ல செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்துவதை குறிக்கும் என்று சொல்லமுடியாது. கெட்ட செயலுக்கு மூளையின் திறனை பயன்படுத்தினாலும் Knowledge என்ற சொல்லை பிரதியிடலாம். ஆனால் மதி என்ற சொல் மேலே விவரிக்கப்பட்ட அத்தனை பொருண்மைகளையும் உள்ளடக்கியது மேலும் மதி என்பது நுட்பமான செயல்பாட்டையும் நல்ல செயல்களுக்காக மட்டுமே மூளையின் திறனை வெளிப்படுத்துவதையும் குறிக்கும். ஏனெனில் கெட்ட செயல்களுக்கு மூளையின் திறனை பயன்படுத்தினால் அதற்கு வேறு சொற்கள் உண்டு அவை கபடம், சூது போன்றவை. இதை போன்ற நுண்ணிய பகுப்புகள் தமிழில் தான் உண்டு.

பொருட்பதம் : ஆலயம்

0 comments

ஆலயம் என்பது ஆ என்றும் லயம் என்றும் பிரியும். ஆ என்றால் இரு பொருள் உண்டு ஒன்று பசு இன்னொன்று ஆன்மா. ஆன்மாவுக்கும் பசுவுக்கும் என்ன தொடர்பு. பசு என்பது குடியானவனின் உடைமையாகவும் அதே சமயம் பெரும்பாலும் கயிற்றால் பிணைக்கப்பட்டும் இருக்கும். அதே போல இந்த ஆத்மாவானதும் மனம் என்னும் குடியானவனிடம் பாசம் என்னும் தளையால் பிணைக்கப்படிருப்பதாக நமது புராதன மெய் இலக்கியங்கள் சொல்கின்றன. இந்த பாசம் என்பதை ஆணவம், கன்மம், மாயை என்று பிரிப்பதுண்டு தேவர் திருவள்ளுவர் இதனை முறையே இருள், வினை, மருள் என்று குறிப்பார். இந்த மூன்றையும் விரித்தால் அது நீளும். அன்மாவுக்கு அதிகாரி இறைவனே இதனால் தான் இறைவனுக்கு பசுபதி என்ற பெயரும் உண்டு. ஆக இந்த ஆன்மாவை லயப்படுத்தும் இடத்தை ஆலயம் என்கிறோம். ஐம்புலன்களும் அதனால் உணரக் கூடியவைகளையும் ஆன்மாவே அறிகிறது. ஆலயத்தில் ஒளியால் கண்களையும் வாசனை பொருட்களால் மூக்கையும் அங்கு வழங்கப்படும் உணவுபொருட்களால் வாயையும் அங்கு நிலவும் அதிர்வுகளால் உடம்பையும் பாடல் மற்றும் தோத்திரங்களால் செவியையும் லயப்படுத்தி அதன் வழியாக  ஐம்புலங்களின் தோற்றுவாயான ஆன்மாவை லயப்படுத்துவதே நோக்கம் இதற்காகவே ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. ஆன்மா மட்டுமே இறைவனை அறியும் என்றும் அந்த உணர்வை சிறிதளவாவது ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த நோக்கத்தை தெளிவாக உணர்த்துவதற்காகவே தமிழில் அதற்கு ஆலயம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்றைய நிலையில் ஆன்மா லயப்படுகிறதா தெரியவில்லை தேவாலயம் பள்ளிவாசல் ஆகியவற்றின் நோக்கமும் இதுவே.


பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்க
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி 


பொருட்பதம் : முன்னுரை

0 comments

தமிழ் மொழியை வடிவமைத்த போது அகத்திய முனிவர் வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத சிறப்பு தன்மைகளுடன் வடிவமைத்தார். அதில் ஒன்று பொருட்பதம். பொருட்பதத்திற்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு பரிமாணத்தையும்  விரிவாய் காண்போம். முதலாவது ஒரு சொல் பல் பொருள் ஒரு பொருள் பல் சொல் எனும் பரிமாணம். இந்த வடிவமைப்பு எல்லா மொழிகளிலும் உள்ளது தானே என்று கருதலாம் ஆனால் தமிழ் மொழிக்கு வேறு ஒரு சிறப்பும் இருக்கிறது அகம் புறம் எனும் வாழ்வியல் ஒழுக்கங்களும் சூட்சுமங்களும் சொற்களில் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றை அறிந்து பயன்படுத்துவது நலம். அவற்றை பற்றி நமது வலைப்பூவின் பொருட்பதம் எனும் பகுதியில் காண்போம்.

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil