ஆலயம் என்பது ஆ என்றும் லயம் என்றும் பிரியும். ஆ என்றால் இரு பொருள் உண்டு ஒன்று பசு இன்னொன்று ஆன்மா.
ஆன்மாவுக்கும் பசுவுக்கும் என்ன தொடர்பு. பசு என்பது குடியானவனின் உடைமையாகவும் அதே சமயம் பெரும்பாலும் கயிற்றால் பிணைக்கப்பட்டும் இருக்கும். அதே போல இந்த ஆத்மாவானதும் மனம்
என்னும் குடியானவனிடம் பாசம் என்னும் தளையால் பிணைக்கப்படிருப்பதாக நமது
புராதன மெய் இலக்கியங்கள் சொல்கின்றன. இந்த பாசம் என்பதை ஆணவம், கன்மம்,
மாயை என்று பிரிப்பதுண்டு தேவர் திருவள்ளுவர் இதனை முறையே இருள், வினை,
மருள் என்று குறிப்பார். இந்த மூன்றையும் விரித்தால் அது நீளும்.
அன்மாவுக்கு அதிகாரி இறைவனே இதனால் தான் இறைவனுக்கு பசுபதி என்ற பெயரும்
உண்டு. ஆக இந்த ஆன்மாவை லயப்படுத்தும் இடத்தை ஆலயம் என்கிறோம்.
ஐம்புலன்களும் அதனால் உணரக் கூடியவைகளையும் ஆன்மாவே அறிகிறது. ஆலயத்தில் ஒளியால் கண்களையும் வாசனை பொருட்களால் மூக்கையும் அங்கு வழங்கப்படும்
உணவுபொருட்களால் வாயையும் அங்கு நிலவும் அதிர்வுகளால் உடம்பையும் பாடல்
மற்றும் தோத்திரங்களால் செவியையும் லயப்படுத்தி அதன் வழியாக ஐம்புலங்களின்
தோற்றுவாயான ஆன்மாவை லயப்படுத்துவதே நோக்கம் இதற்காகவே ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.
ஆன்மா மட்டுமே இறைவனை அறியும் என்றும் அந்த உணர்வை சிறிதளவாவது
ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த
நோக்கத்தை தெளிவாக உணர்த்துவதற்காகவே தமிழில் அதற்கு ஆலயம் என்று பெயரும்
சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் ஆன்மா லயப்படுகிறதா தெரியவில்லை தேவாலயம் பள்ளிவாசல்
ஆகியவற்றின் நோக்கமும் இதுவே.
பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்க
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்சோதி
0 comments:
Post a Comment